search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரும பிரச்சனை"

    • மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும்.
    • சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள்.

    வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய யோசிப்பீர்கள்.

    சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களுக்கு சருமம் சிவந்து தடித்து காணப்படும். இதனால் எரிச்சல் உண்டாகி, பேட்ச் , பேட்சாக இருக்கிறதா? இனி சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள். எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து, அரிப்பினை தடுக்க சிறந்த வழி இது.

    மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும். இதனைப் போக்க மிக எளிய வழி இதுதான். வாழைப் பழத் தோலினை மருக்கள் மீது தேயுங்கள். பின், வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருங்கள். நாளடைவில் மருக்கள் மாயமாய் மறைந்துவிடும்.

    இரவு நீண்ட நேரம் படிப்பதாலும், வேலை செய்வதாலும் கண்களைச் சுற்றி கருவளையங்கள் தோன்றும். வாழைப்பழத்தோளை, கற்றாழை ஜெல்லுடன் கலந்து கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தின்மீது பூசிக்கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் அப்படியே ஊறவிடுங்கள். குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரத்தில் இரண்டு முறை செய்து பாருங்கள். கண்களுக்கு புத்துணர்வு கிடைக்கும். மேலும், சருமத்தில் சுருக்கங்கள் வாராமல் தடுத்து, வயது முதிர்வை கட்டுக்குள் வைக்கும்.

    வாழைப்பழத் தோளில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் ஏவில் உள்ள கரோடினோய்ட் வைட்டமின், தொற்று உள்ள இடத்தை சரி செய்து, பருக்களை குணப்படுத்தும். நன்றாக பழுத்த வாழைப்பழத் தோளை நறுக்கி, முகத்தில் பருக்கள் உள்ள இடங்களில், மெதுவாக தேய்க்கவும். பத்து நிமிடம் மசாஜ் செய்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். வீட்டில் இருக்கப்போகிறீர்கள் என்றால், நாள் முழுவதும் கூட கழுவாமல் அப்படியே விட்டுவிடலாம். இரவு தூங்குவதற்கு முன் கூட இப்படி செய்து தூங்கி விடலாம். நீண்ட நேரம் சருமத்தில் (skin) இருந்து கொண்டு நன்றாக வேலை செய்யும்.

    • அக்குளை நன்கு சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
    • வீட்டில் இருக்கும் சில இயற்கை பொருட்களை பயன்படுத்தியே நாம் அக்குள் கருமையை நீக்க முடியும்.

    பெண்கள் பெரும்பாலும் வெளிப்புற அழகிற்கு கவனம் செலுத்தும் அளவிற்கு புறஅழகில் கவனம் செல்லுவதில்லை. குறிப்பாக அக்குள்களில் படிந்திருக்கும் கருமையை நீக்குவது அவசியம். அக்குளை நன்கு சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இல்லை என்றால் மிகவும் கருப்பாக மாறிவிடும். வீட்டில் இருக்கும் சில இயற்கை பொருட்களை பயன்படுத்தியே நாம் அக்குள் கருமையை நீக்க முடியும். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

    பேக்கிங் சோடா : உங்கள் கைகளின் அக்குள்களில் உள்ள கருமையை நீக்க பேக்கிங் சோடா உதவும். இதற்கு நீங்கள் பேக்கிங் சோடாவுடன், தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து அதனை அக்குள்களில் தடவி உலர விட்டு, ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

    எலுமிச்சை சாறு : எலுமிச்சையில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அது சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே வாரம் 4 நாட்கள் அரை எலுமிச்சை பழத்தை எடுத்து அதனை கடலை மாவில் தொட்டு நன்கு ஸ்க்ரப் செய்யவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கருமை மறைந்துவிடும்.

    உருளைக்கிழங்கு சாறு : உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. உருளைக்கிழங்கை வெட்டி சாறு எடுத்து அதனை அக்குள் கருமை பகுதியில் தடவி 5-10 நிமிடம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும் இரண்டு முறை செய்து வந்தால், கருமையானது விரைவில் நீங்குவதை கண்கூட காண்பீர்கள்.

    கற்றாழை : கற்றாலையின் ஜெல்லை எடுத்து அக்குளில் தடவி மசாஜ் செய்யுங்கள். தினமும் 15 நிமிடங்கள் இதனை செய்து வந்தால் கருமை மறையும்.

    தயிர் : தயிர் அக்குள் கருமையை நீக்க உதவும் முதன்மையான பொருளாகும். தயிருடன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, சிறிது கடலை மாவு சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து அக்குளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

    • கோடையில் கொப்புளங்கள், வேர்க்குரு, கட்டிகள் ஏற்படுவது சகஜம் தான்.
    • தினமும் கோடையில் பழச்சாறினை அருந்துவது நல்லது.

    தினமும் இருமுறையாவது குளிக்கலாம். காலையில் குளித்த பின்பு மாலையில் தான் அடுத்த குளியல் அமைய வேண்டும். மாலைக் குளியலால் நாள் முழுவதும் ஏற்பட்ட வெயிலின் தாக்கம், அசதி, அலுப்பு குறையும். நாட்டு மருந்து கடையில் சந்தனாதி தைலம், பிருங்காமலாதி தைலம், திரிபலா தைலம் போன்ற தைல எண்ணெய்கள் கிடைக்கும். மேற்கூறிய தைல எண்ணெய்களில் ஏதாவது ஒன்றினைத் ( நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஓ.கே தான் ) தலையில் தடவிக் குளித்து வரலாம். காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு வெயிலில் அலைந்தால் தலைவலி ஏற்படும். மாலையில் செய்யும் எண்ணெய்க் குளியலால் தூக்கம் நன்றாக வரும். பாலில் அரைத்த வெள்ளை மிளகு, தேங்காய்ப் பாலில் அரைத்த சீரகம், நீரில் அரைத்த கசகசா இவற்றையும் உடலில் தேய்த்துக் கொண்டு குளிக்கலாம்.

    கோடைக் காலத்திற்கு ஏற்ற உணவுகளான இளநீர், பனை நுங்கு, தர்ப்பூசணி, முலாம்பழம், வெள்ளரிப் பிஞ்சு போன்றவற்றை பகல் உணவுக்குப் பின் ஒன்றிரண்டு மணி நேரம் கழித்து உண்பது நல்லது. இந்த உணவுகள் கோடையில் உடலுக்கு நன்மை செய்வதால் தோலுக்கும் ( சருமம் ) மிகுந்த ஆரோக்கியத்தினை, பளபளப்பினைத் தருகின்றது. தினமும் கோடையில் பழச்சாறினை அருந்துவது நல்லது.

    தினமும் நீராவி முகருவதினைச் செய்தால் முகத்துவாரங்கள் விரிவடைந்து அழுக்குகள் வெளியேறும். உலர்ந்த சருமம் உள்ளவர்கள் 5 நிமிடமும், எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் 10 நிமிடமும் கொதிக்கும் நீரிலிருந்து எழும் நீராவியை நுகருவது நல்லது.

    கோடையில் கொப்புளங்கள், வேர்க்குரு, கட்டிகள் ஏற்படுவது சகஜம் தான். வெப்பத்தால் ஏற்படும் சரும அலர்ஜி, சருமம் வறண்டு போவதற்கு காரணங்கள் எண்ணெய் தேய்த்துக் கொள்ளாதது, மாங்காய், மாம்பழம் அதிகம் உண்பது போன்றவற்றாலும் சரும பாதிப்புகள் உருவாகும். இவற்றுக்கு சீரகம், ஓமம், கார்போக அரிசி இவற்றைத் தேங்காய் பாலில் அரைத்து உடலில் தடவி சிறிது நேரம் குளித்தால் நல்லது.

    கோடையில் தோலில் அரிப்பும், சினப்பும் ஏற்பட்டால் முன்னிரவில் கசகசாவை ஸ்பூன் எடுத்து தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தேய்த்துக் குளித்தால் அரிப்பு குறையும்.

    அருகம்புல் சாறு கொண்டு தயாரிக்கப்படும் அருகம் புல் தைலம் மேல் பூச்சாக பயன்படுத்தினால் அரிப்பு, உடல் சூடு குறையும்.

    வெயிலில் பயன்படுத்த சில முகத் தேய்ப்புகள் (Scrubs):

    1. உலர்ந்த ஆரஞ்சுத் தோல், சமைத்த ஓட்ஸ் + பாதாம் பருப்பு இவை ஒவ்வொன்றும் ஒரு கப் எடுத்து மிக்ஸியில் பொடித்து கலந்து கொள்ளவும். பொடியை சிறிது எடுத்து வெதுவெதுப்பான நீரில் குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் அல்லது அரை மணி நேரம் கழித்து கழுவவும். இதனால் அழுக்குகள் நீங்கும்.

    2. உலர்ந்த சருமத்திற்கேற்ற 'மாஸ்க்': இரண்டு தேக்கரண்டி அளவு பால் எடுத்துக் கொண்டு அத்துடன் இரண்டு மேஜைக் கரண்டி தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவவும். சம அளவு ரோஜா பன்னீர், கிளிசரின் எடுத்து இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் Moisturiser ஆக பயன்படுத்தலாம்.

    3. எண்ணெய்ப் பசை உள்ள சருமத்திற்கு ஒரு தக்காளியிலிருந்து எடுக்கப்பட்ட கூழுடன், முல்தானி மட்டி சேர்த்துக் குழைத்து முகத்தில் தடவிக் கொள்ளவும். முகத்தில் இந்த கலவை உலர்ந்து போகும் வரை விட்டு, பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும்.

    4. இயல்பான ( நார்மல் ) சருமத்திற்கு மஞ்சள் பொடியை பாலில் குழைத்துத் தடவி, அரை மணி அல்லது ஒரு மணி நேரம் கழித்துத் கழுவவும். சந்தனப் பொடியுடன் ரோஜா பன்னீர் சேர்த்து குழைத்து தடவி வரவும். கருமை திட்டுக்களையும் இந்த கலவை போக்கும். இரவு முழுவதும் இந்த கலவை முகத்தில் இருக்கட்டும்.

    • சீரம் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது.
    • உங்கள் சருமத்திற்கு பல நன்மைகளை தரக்கூடியதாக சீரம் உள்ளது.

    சீரம் என்பது தற்போது மார்க்கெட்டில் புகழ்பெற்று வரும் அழகு பொருளாகும். கொரியன் மேக் அப் டிரெண்டில் முக்கியமாக பயன்படுத்தும் பொருள் சீரம். இது எண்ணெய் போல் மிருதுவாக்கும் தண்ணீர் போல் இருக்கும். இதன் தன்மை சருமத்தின் துளைகளுல் புகுந்து தோலை மிருதுவாக்கும்.

    சீரம் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது. பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறந்த தயாரிப்பாக உள்ளது.

    மாய்ஸ்சரைசருக்கு முன்னதாக பயன்படுத்தப்படும் சீரமானது, பல சிறிய மூலக்கூறுகளைக் கொண்டுள்ளதால் எளிதில் தோலின் ஆழமான அடுக்குகளில் ஊடுருவி, சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சரியாக வழங்குகிறது.

    இதனால் உங்கள் சருமத்தை பிரகாசமாக்குவதோடு, கரும்புள்ளிகள், வெண் புள்ளிகள், பருக்கள், கறைகள், திறந்த துளைகள், சுருக்கங்கள், கோடுகள் போன்ற சரும பிரச்சனைகளையும் குறைக்கிறது. இப்படி பல நன்மைகளை உங்கள் சருமத்திற்கு தரக்கூடியதாக சீரம் உள்ளது.

    நாம் எந்த வகையான சரும பராமரிப்பு அல்லது அழகு சாதன பொருட்களை வாங்குவதாக இருந்தாலும் உங்களுடைய சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியமானது.

    வறண்ட சருமம், எண்ணெய் சருமம், உணர்திறன் மிக்க சருமம் என ஒவ்வொருவரது சருமம் வெவ்வேறு வகையானது.

    எண்ணெய் சருமம் கொண்ட நபர்கள் முகப்பரு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், சாலிசிலிக் அமிலம், ரெட்டினோல் அல்லது நியாசினமைடு கொண்ட சீரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு ஹைலூரோனிக் அமிலம் அடங்கிய சீரம் சிறப்பானது. இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. சாதாரண சரும வகையைக் கொண்டவர்களுக்கு வைட்டமின் "சி" அல்லது "ஹைலூரோனிக்" அமிலம் அடங்கிய சீரம் சிறந்ததாகும்.

    சருமத்தின் வகை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அதனை பயன்படுத்துபவரின் வயதும் சரும பராமரிப்பு சாதனங்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்குவகிக்கிறது.

    சீரம் பொதுவாக வயதான தோற்றத்தை குறைக்கவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே நீங்கள் டீனேஜராக இருந்தால், சரும பராமரிப்பிற்கு க்ளென்சர், மாய்ஸ்சரைசர் மற்றும் சன் ஸ்கிரீன் போன்றவற்றைப் பயன்படுத்தினாலே போதும்.

    இருபது வயதை தொடப்போகும் பெண்கள், "நியாசினமைடு" அல்லது "ஹைலூரோனிக்" அமிலம் கலந்த சீரத்தை பயன்படுத்தலாம். இருபது வயதிற்கு மேல் மற்றும் முப்பது அல்லது நாற்பது வயதானவர்கள் "ரெட்டினோல்" அடங்கிய சீரம் வகைகளை தேர்வு செய்வது உங்கள் வயதான தோற்றத்தை மாற்ற உதவும்.

    சருமத்தின் பிரச்சனைகளை பொறுத்து தான் பராமரிப்பு சாதனங்களை பயன்படுத்த வேண்டும். உதாரணமாக சீரற்ற சரும நிறம், கரும்புள்ளி, முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் "ஆல்ஃபா-ஹைட்ராக்ஸி" அமிலங்களான கிளைகோலிக் அமிலம் அல்லது லாக்டிக் அமிலம், அசெலாயிக் அமிலம், வைட்டமின் சி மற்றும் கோஜிக் அமிலம் ஆகியவை அடங்கிய சீரம் வகைகளை பயன்படுத்தலாம்.

    வயதான தோற்றங்களை மறக்க விரும்புவோருக்கு ரெட்டினோல் சீரம் சிறந்த தேர்வாகும். கரும்புள்ளிகள் அல்லது வெண் புள்ளிகளைக் கொண்ட சருமத்திற்கு ரெட்டினோல் அல்லது சாலிசிலிக் அமிலம் நிறைந்த சீரம் சிறப்பான பலனளிக்கக்கூடும்.

    மேற்கூறிய சரும பிரச்சனைகள் அனைத்தும் இருந்தால், ஒரே நேரத்தில் அனைத்து விதமான சீரத்தையும் பயன்படுத்த வேண்டாம். அது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக பின்விளைவுகளை பெரிதாக்கக்கூடும்.

    எனவே வயது, சரும வகை, சரும பிரச்சனை ஆகியவற்றை பொருத்து சரியான மூலப்பொருட்களைக் கொண்ட சீரத்தை தேர்வு செய்யுங்கள். அதேபோல் சரும பிரச்சனைகள் சம்பந்தமான பராமரிப்பு சாதனம் அல்லது சிகிச்சை மேற்கொள்ளும் முன்பு நாம் தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

    • பாதம் வெடிப்பினை ஆரம்பித்திலேயே கவனிக்காவிட்டால், பிளவு ஆழமாக சென்று பின் மறைவது கடினமாகிவிடும்.
    • இந்த ஸ்கரப்பினால் பாதங்களையும், குதிகால்களையும் நன்றாக தேயுங்கள்.

    ஏனோ பெண்கள் முகம், கைகளை பராமரிப்பது போல, பாதங்களை கண்டு கொள்வது கூட இல்லை. தோற்றத்தை எத்தனைஅழகு படுத்திக் கொண்டாலும், பாதம் வெடித்து, பொலிவின்றி இருந்தால், மொத்த மெனக்கெடலும் வீண். பாதம் வெடிப்பினை ஆரம்பித்திலேயே கவனிக்காவிட்டால், பிளவு ஆழமாக சென்று பின் மறைவது கடினமாகிவிடும். ஆகவே தினமும் குளிக்கும் நேரத்தில் பாதங்களுக்கென ஒரு சில நிமிடங்கள் செலவிட்டால் போதும். வெடிப்பின்றி தடுக்கலாம். ஃப்யூமின் கல்லைனைக் கொண்டு தினமும் தேய்த்தால், பாதத்தில் இருக்கும் இறந்த செல்கள் அகன்று விடும்.

    தேவையானவை :

    வெள்ளை சர்க்கரை - அரை கப்

    சமையல் சோடா - 1 டீஸ்பூன்

    ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்

    தேன்- 1 டீஸ்பூன் பாதாம் அல்லது லாவெண்டர் எண்ணெய் - 2 துளி

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போடுங்கள். அதன் பின் ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக கலக்குங்கள். பின்னர் சமையல் சோடாவை போடவும். இறுதியில் தேனை சேர்த்து, கட்டிகள் இல்லாதபடி நன்றாக கலக்குங்கள். பின்னர் பாதாம் லாவெண்டர் போன்ற ஏதாவது வாசனை எண்ணெயை இதில் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதனை பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஸ்க்ரப் 15 நாட்களுக்கு வரும்.

    சர்க்கரை பாதத்தில் உள்ள கடினத்தன்மையை நீக்கி, மிருதுவாக்கும்.

    சமையல் சோடா தொற்றுக்களை அகற்றும். சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை நீக்கிவிடும். சருமத்தின் அமில மற்றும் காரத் தன்மையை சமன் செய்யும்.

    தேன் ஈரப்பதம் அளித்து, பாதத்தில் உள்ள வறட்சியை போக்கிவிடும்.

    ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு ஊட்டம் அளித்து, அழகாக்கிறது.

    தினமும் குளிப்பதற்கு முன் இந்த ஸ்கரப்பினால் பாதங்களையும், குதிகால்களையும் நன்றாக தேயுங்கள். 10 நிமிடம் அப்படியே விட்டு பிறகு குளிக்கச் செல்லலாம். இது பாதம் மற்றும் கைகளுக்கு மிருதுத்தன்மை தருகிறது. கருமை அகன்று, அழுக்குங்கள் நீங்கி, வெடிப்புகள் மறைந்துவிடும்.

    • எல்லா நேரமும் சன்ஸ்கிரீனை குறைவான அளவில்தான் உபயோகிக்க வேண்டும்.
    • சன்ஸ்கிரீனை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் ஆபத்துக்களை குறைக்கலாம்.

    சூரியனிடம் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் சருமத்திற்கும், உடல் பாகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனை தவிர்க்க சருமத்திற்கு போதுமான பாதுகாப்பை வழங்குவது அவசியம். ஏனெனில் புற ஊதாக்கதிர்கள் நேரடியாக சருமத்தை தாக்குவது முன்கூட்டியே வயதான தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும். சரும புற்றுநோய் ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய ஆபத்துக்களில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு சன்ஸ்கிரீன் உபயோகமாக இருக்கும். ஆனால் எல்லோருடைய சருமத்திற்கும் சன்ஸ்கிரீன் ஒத்துக்கொள்ளாது.

    அது சிலருக்கு சருமத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். சன்ஸ்கிரீனில் சேர்க்கப்படும் ரசாயனக்கலவைதான் பக்கவிளைவுகளுக்கு காரணமாக அமையும். புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க தோல் பகுதியை சுற்றி பாதுகாப்பு கவசத்தை உருவாக்குவதற்கு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அது மிருதுதன்மை வாய்ந்த சருமம் கொண்டவர்களை பாதிக்கும். ஆனால் சன்ஸ்கிரீனை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் ஆபத்துக்களை குறைக்கலாம்.

    * எல்லா நேரமும் சன்ஸ்கிரீனை குறைவான அளவில்தான் உபயோகிக்க வேண்டும். குறைந்த அளவைக்கொண்டே வெயில் படும் அனைத்து பாகங்களிலும் தடவிவிட வேண்டும்.

    * சன்ஸ்கிரீனை பூசிக்கொண்ட உடனே வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே சன்ஸ்கிரீனை பூசிக்கொள்ள வேண்டும்.

    * உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியாகிக்கொண்டிருந்தால் ஐந்து மணி நேரம் கழித்து மீண்டும் சன்ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும்.

    * முகப்பரு பாதிப்புக்கு ஆளானவர்கள் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை தவிர்த்துவிடலாம். ஏனெனில் அது முகப்பருவின் வீரியத்தை அதிகப்படுத்திவிடும். அவர்கள் எண்ணெய் பசை இல்லாத அழகு சாதன பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். அதுபோல் உடலில் காயம், தடிப்பு உள்ளிட்ட சரும பிரச்சினைகள் இருந்தாலும் சன்ஸ்கிரீன் உபயோகிக்கக்கூடாது.

    * சன்ஸ்கிரீனில் இருக்கும் ரசாயனங்கள் சிலருடைய சருமத்தை கடுமையாக பாதிக்கும். சருமம் சிவத்தல், வீக்கம், அரிப்பு, தடிப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். வாசனை திரவியங்களை உள்ளடக்கிய சன்ஸ்கிரீன்கள் சிலருக்கு ஒவ்வாமை பாதிப்பை ஏற்படுத்தும். சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு முன்பு தோல் மருத்து வரிடம் ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.

    * கண்களுக்கு அருகே சன்ஸ்கிரீனை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கண்களில் எரிச்சல், அரிப்பு, வெளிச்சத்தை பார்த்தால் கண் கூச்சம் போன்ற பிரச்சினையை ஏற்படுத்தும். சன்ஸ்கிரீனில் ரசாயனத்தன்மை அதிகம் இருந்தால் கண் பார்வைத்திறன் பாதிப்புக்குள்ளாகுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

    * சன்ஸ்கிரீனில் உள்ள சில பொருட்கள் மார்பக செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    * குழந்தைகளின் சருமம் மிருதுவானது என்பதால் சன்ஸ்கிரீன் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதனால் குழந்தைகளுக்கு உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

    * சன்ஸ்கிரீனை பயன்படுத்தியதும் சருமத்தில் கொப்பளங்கள், வலி, தடிப்புகள் போன்ற அறிகுறிகள் சிலருக்கு தோன்றும். அவர்கள் சன்ஸ்கீரினை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    • கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
    • கிரீன் டீ தேயிலையை ஊற வைத்து பின் ஆவி பிடித்தால் முகத்திற்கு நல்லது.

    சூரியனில் இருந்து வெளியாகும் புறஊதா கதிர்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இக்கதிர்கள் சருமத்தில் எரிச்சல், குழிகள், கருமை போன்றவற்றை ஏற்படுத்தும். கிரீன் டீயை முகத்திற்கு அப்ளை செய்வதன் மூலம் இந்த பாதிப்புகளை சரி செய்யலாம்.

    கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பல்வேறு வழிகளில் தோல் பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

    இது பல அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தோல் பராமரிப்புப் பொருட்களில் காணப்படும் ஒரு சில பொருட்களில் ஒன்றாகும். இதை பயன்படுத்துவதால் முகத்திற்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

    * கிரீன் டீயுடன் சீனி மற்றும் தேன் சேர்த்து முகத்தில் பூசி ஸ்க்ரப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவடைந்துக் காணப்படும்.

    * கிரின் டீ தயாரித்து அந்த கலவையை எடுத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து, கட்டியானதும் முகத்தில் பூசி வரவேண்டும். இதை தினமும் செய்தால் நல்லது.

    * கடலை மாவு, கிரீன் டீ மற்றும் தயிர் சேர்த்து முகத்தில் பூசி, காய்ந்ததும் தண்ணீரில் கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக் முகப்பருக்கள் வருவதை தடுக்க உதவும்.

    * இரவு தாமதமாக தூங்குவதாலும், அதிக வேலையினாலும் கண்களுக்கு கீழ் கருவளையங்கள் உண்டாகக்கூடும். இதனை போக்க கிரீன் டீ பையை தண்ணீரில் ஊற வைத்து எடுத்த பின் கண்களுக்கு மேல் வைத்து 20 நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம். இதனால் கண்களில் உள்ள வீக்கங்கள் குறைவதோடு சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.

    * சூடான தண்ணீரில் கிரீன் டீ தேயிலையை ஊற வைத்து பின் ஆவி பிடித்தால் முகத்திற்கு நல்லது. மேலும் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கும்.

    * கிரீன் டீயை முகத்திற்கு தொடர்ந்து எட்டு வாரங்கள் அப்ளை செய்வதன் மூலம், முகத்தில் உள்ள எண்ணெய் பசையானது குறையும். மேலும், எதிர்காலத்தில் முகப்பரு வருவது போன்ற பிரச்சனைகளும் குறைக்கப்படுகின்றன.

    கிரீன் டீ ஆனது சருமத்தை இறுக செய்கிறது. இதனால் சருமத்துளைகள் அடைக்கப்படுகின்றன. டீ பேக்கை சருமத்திற்கு போடுவதன் மூலம் சருமத்தின் நிறம் மேம்படுத்தப்படுகிறது. இது சருமத்திற்கு மிகச்சிறந்த பாதுகாப்பானாகவும் பயன்படுகிறது.

    • உடற்பயிற்சி செய்த பிறகு ஒரு சில விஷயங்களை கவனமாக பின்பற்றுவது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.
    • சூரிய கதிர்வீச்சுகளிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு சன்ஸ்கிரீன் முக்கியமானது.

    உடல் எடையை குறைப்பதற்கும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் நிறைய பேர் உடற்பயிற்சியை நாடுகிறார்கள். உடற்பயிற்சி உடலுக்கு மட்டும் நன்மை சேர்ப்பதில்லை. உள் உறுப்புகளுக்கும், சருமத்திற்கும் நலம் பயக்கும். உடற்பயிற்சி செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். அதன் மூலம் ஆக்சிஜனை பரப்பி சருமத்தையும் வளப்படுத்தும். அதாவது உடற்பயிற்சியின் மூலம் சருமத்தின் தரத்தையும் மேம்படுத்தமுடியும். அதேவேளையில் உடற்பயிற்சி செய்த பிறகு ஒரு சில விஷயங்களை கவனமாக பின்பற்றுவது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.

    உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது செய்து முடித்த பிறகோ கைகளை கொண்டு முகத்தை தொடக்கூடாது. குறிப்பாக உடற்பயிற்சி கருவிகளை பயன்படுத்தி பயிற்சி செய்யும்போது கைகளில் அழுக்குகள் படிந்திருக்கும். அந்த கைகளால் முகத்தை தொடும்போது சருமத்தில் பாக்டீரியாக்கள் பரவுவதற்கு அடிகோலிடும். ஜிம் கருவிகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் முகத்தில் படர்ந்தால் முகப்பருக்கள் எளிதாக தோன்றிவிடும். அதனால் எப்போதும் டவல் வைத்துக்கொள்ளுங்கள். வியர்வை வழியும்போது கைகளால் துடைப்பதற்கு பதிலாக டவலை பயன்படுத்துங்கள்.

    சரும பராமரிப்பில் முக்கியமான அம்சம், முகத்தை சுத்தப்படுத்துவதாகும். வியர்வை, அழுக்கு, தூசு, இறந்த சரும செல்கள், பாக்டீரியாக்கள் போன்றவை சருமத்திற்கு தொல்லை தருபவை. இத்தகைய பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு சருமத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அடிக்கடி முகத்தை கழுவி வரலாம். சருமத்தின் தன்மையை பொறுத்து ஆயில் மற்றும் ஜெல் அடிப்படையிலான கிளீனர்களை பயன்படுத்தலாம். வியர்வை, சூரிய ஒளிக்கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு ஆயில் அடிப்படையிலான கிளீன்சர்களை பயன்படுத்தலாம். சாலிசிலிக் அமிலம் கொண்ட ஜெல் அடிப்படையிலான கிளீன்சர், பாக்டீரியாக்களை அகற்றவும், சரும துளைகளை சுத்தம் செய்யவும் உதவும்.

    சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள உதவும் சிறந்த நண்பனாக மாய்ஸ்சுரைசர் விளங்குகிறது. சருமத்தை அமைதியாக உணர வைப்பதற்கான திறவுகோலாகவும் அமைந்திருக்கிறது. உடற்பயிற்சி செய்த பிறகு சருமத்தில் உண்டாகும் அரிப்பு, சிவத்தல் போன்ற பிரச்சினைகளை குறைக்கவும் உதவுகிறது. மாய்ஸ்சுரைசர்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது என்பதால் கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு தாராளமாக உபயோகிக்கலாம். சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்வதும், உடற்பயிற்சியின்போது வெளியேறும் வியர் வையை ஈடு செய்ய நீர்ச்சத்தை பராமரிப்பதும் முக்கியம்.

    சூரிய கதிர்வீச்சுகளிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு சன்ஸ்கிரீன் முக்கியமானது. சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கலாம். சரும வீக்கம், சிவத்தல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். சுருக்கங்கள், வயதான தோற்ற அறிகுறிகளில் இருந்தும் சருமத்தை பாதுகாக்கலாம். கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்ட பிறகு சருமத்திற்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படும். கடுமையான புற ஊதாக்கதிர்வீச்சுகளிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க எஸ்.பி.எப். தன்மை கொண்ட பொருத்தமான சன்ஸ்கிரீனை தேர்வு செய்வது முக்கியம்.

    தண்ணீர் பருகுவது தாகத்தை மட்டும் தணிக்க உதவுவதில்லை. உடலை சுத்தப்படுத்தும். மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத்தும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தண்ணீர் குடிக்கும்போது உடல் மட்டுமல்ல சருமமும் பயனடைகிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், உடலில் நீர்ச்சத்தை பேணுவதும் சருமத்தை மிருதுவாக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சியின்போது வியர்வை மூலம் வெளியேறும் நீர்ச்சத்தை ஈடு செய்வது அவசியம். அதனால் உடற்பயிற்சி செய்தபிறகு குறைந்தபட்சம் ஒரு டம்ளர் தண்ணீராவது பருகுவது அவசியமானது.

    • கோடை காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமானது.
    • சன்ஸ்கிரீன் உபயோகப்படுத்துவது சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்.

    வெளி இடங்களுக்கு செல்லும்போது சன்ஸ்கிரீன் உபயோகப்படுத்துவது சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும். சூரிய கதிர்வீச்சுகளிடம் இருந்து செல்களை சேதம் அடையாமல் காக்கும். கோடை காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமானது. வெளியே செல்லும்போது தான் அதனை பயன்படுத்த வேண்டும் என்றில்லை. வீட்டிற்குள் இருக்கும்போதும் சன்ஸ்கிரீனை சருமத்திற்கு பூசி வரலாம். அதனை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்கள்:

    நீல ஒளியில் இருந்து காக்கும்:

    ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், கணினிகள் மற்றும் டி.வி.கள் போன்ற எலெக்ட்ரிக் சாதனங்களின் டிஜிட்டல் திரைகள் நீல ஒளியை வெளியிடுகின்றன. அவை சருமத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. நீல ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் ப்ரீ ரேடிக்கல்கள் வயதாகும் செயல்முறையை விரைவுபடுத்தும். மெலனின் உற்பத்தியையும் ஊக்குவித்து சரும புள்ளிகளை விரைவாக வயதான தோற்றத்திற்கு வித்திடும்.

    நீல ஒளியின் வீரியம் சருமத்தை எளிதில் பாதிப்புக்குள்ளாக்குவதுதான் அதற்கு காரணம். அதனை தவிர்க்க தினமும் சன்ஸ்கிரீன் அணிவது நல்லது. குறிப்பாக டிஜிட்டல் திரை சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துபவர்கள் மறக்காமல் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வது சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்.

    புற்றுநோயை தடுக்கும்:

    வீட்டுக்குள் இருக்கும் சமயங்களில் சூரிய கதிர்வீச்சுக்களால் தீங்கு ஏற்படாது என்று பலர் நினைக்கிறார்கள். அதனால் சன்ஸ்கிரீன் உபயோகிக்க தேவையில்லை என்று கருதுகிறார்கள். ஆனால் சூரியனால் உமிழப்படும் புற ஊதாக்கதிர்வீச்சுகளின் வீரியம் எல்லா இடங்களிலும் பரவி இருக்கும்.

    ஆரம்பத்தில் சருமத்திற்கு லேசான பாதிப்பை ஏற்படுத்தும். காலப்போக்கில் செல்கள் சேதமடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. புற ஊதாக்கதிர்களால் சருமம் பாதிப்புக்குள்ளாகுவதை கவனிக்காவிட்டால் சரும புற்றுநோய் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

    சருமத்தை பாதுகாக்கும்:

    சருமத்துக்கு ஈரப்பதமூட்டும் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் சேர்க்கப்படும் சன்ஸ்கிரீன் மூலக்கூறுகள் கொண்ட அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவது சிறப்பானது. நவீன சன்ஸ்கிரீன்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கும் கூறுகளை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்தியும் சருமத்தை பாதுகாக்கலாம்.

    வயது முதிர்ச்சியை தடுக்கும்:

    சருமம் விரைவில் முதிர்ச்சி அடைவதற்கான அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதை தவிர்ப்பதில் சன்ஸ்கிரீனுக்கு முக்கிய பங்கு உண்டு. சன்ஸ்கிரீனிலும் எஸ்.பி.எப். 30-க்கும் அதிகமாக இருக்கும் கிரீமை பயன்படுத்துவது சருமத்திற்கு இதமளிக்கும்.

    சன்ஸ்கிரீனை அறவே தவிர்ப்பது, மற்ற சரும பொருட்களின் செயல்திறனைக் குறைப்பதுடன், சூரிய ஒளி அதிகம்படும் பகுதியில் செல்லும்போது சருமத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    • ஆரஞ்சு தோலில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்திற்கு உடனடியான மினுமினுப்பைத் தரக்கூடியது.
    • மாசு, வெயிலால் ஏற்படும் கருமையை இயற்கை பொருட்களைக்கொண்டு நீக்கும் முறையே ‘பிளீச்சிங்’.

    அதிகப்படியான வெயில், மாசு போன்றவற்றால் சருமம் கருத்து பொலிவு இழந்து போகும். இந்தக் கருமையை, சில பொருட்களைக்கொண்டு நீக்கும் பராமரிப்பு முறையே 'பிளீச்சிங்' எனப்படுகிறது. எந்த விதமான ரசாயனமும் பயன்படுத்தாமல், எளிதாக கிடைக்கும் இயற்கையானப் பொருட்களைப் பயன்படுத்தி கருமையை நீக்கி, சரும நிறத்தை பழையபடி கொண்டு வர முடியும். அதைப்பற்றி பார்க்கலாம்.

    கடலை மாவு பிளீச்

    கடலை மாவு - 2 தேக்கரண்டி

    கோதுமை மாவு - 1 தேக்கரண்டி

    தயிர் - 2 தேக்கரண்டி

    பாதாம் - 5

    எலுமிச்சம் பழச்சாறு - 2 தேக்கரண்டி

    சிறிய பாத்திரத்தில் கடலை மாவு, கோதுமை மாவு, பொடியாக்கப்பட்ட பாதாம், தயிர், எலுமிச்சம் பழச்சாறு இவை அனைத்தையும் கலந்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். சிறிது பஞ்சை காய்ச்சாத பாலில் நனைத்து முகம் முழுவதும் சுத்தப்படுத்தவும். பின்பு ஊறவைத்த கடலை மாவு கலவையை பூசி மென்மையாக மசாஜ் செய்து, 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். வாரம் 3 முறை இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.

    புளி

    ரசாயனக் கலவை கலந்த பிளீச்சிங் பொருட்களுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக புளி இருக்கிறது. இது சருமத்துக்கு உடனடியான பொலிவைத் தரக்கூடியது.

    புளி - ஒரு எலுமிச்சை அளவு

    மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

    அரிசி மாவு - 1 தேக்கரண்டி

    தேன் - 1 தேக்கரண்டி

    எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி

    ரோஜா பன்னீர், தண்ணீர் - தேவையான அளவு

    வெந்நீரில் புளியை ஊறவைத்து அதன் சாற்றை கெட்டியாக பிழிந்தெடுத்துக்கொள்ளவும். பிழிந்த சாறில் அரிசி மாவு, மஞ்சள் தூள், எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேன் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். முகத்தை ரோஜா பன்னீர் கொண்டு நன்றாகத் துடைத்த பின்பு, புளி கலவையை முகம் முழுவதும் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்யலாம்.

    ஆரஞ்சு தோல்

    ஆரஞ்சு தோலில் உள்ள 'வைட்டமின் சி' சருமத்தில் உள்ள கரும்புள்ளி, சீரற்ற நிறத்தை நீக்கி பொலிவுடன் வைக்க உதவுகிறது. மேலும் இதிலுள்ள சிட்ரிக் அமிலம் சருமத்திற்கு உடனடியான மினுமினுப்பைத் தரக்கூடியது.

    ஆரஞ்சு தோல் பொடி - 2 தேக்கரண்டி

    வால்நட் பொடி - 1 தேக்கரண்டி

    சந்தனத் தூள் - 1 தேக்கரண்டி

    வெள்ளரிச் சாறு - 5 தேக்கரண்டி

    சிறிய பாத்திரத்தில் ஆரஞ்சு தோல் பொடி, வால்நட் பொடி, சந்தனத் தூள் மற்றும் வெள்ளரிச் சாறு என அனைத்தையும் நன்றாகக் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். முகத்தை வெள்ளரிச் சாறு கொண்டு துடைத்த பின்பு, ஆரஞ்சு தோல் பிளீச்சிங் கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். இவ்வாறு வாரம் இரண்டு முறை ஆரஞ்சு தோல் பிளீச்சிங் செய்யலாம்.

    • அழகுசாதனப் பொருட்களில் முக்கியமாக சேர்க்கப்படுவது 'கோகோ பட்டர்'.
    • கோகோ பட்டர் சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாத்து அதை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகின்றன.

    சருமப் பராமரிப்புக்கான கிரீம்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் முக்கியமாக சேர்க்கப்படுவது 'கோகோ பட்டர்'. கோகோ விதைகளில் இருந்து எடுக்கப்படும் கொழுப்பு நிறைந்த மஞ்சள் நிறப் பொருளே 'கோகோ பட்டர்' என அழைக்கப்படுகிறது. இதில் நன்மை தரும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளன. பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மெக்னீசியம், இரும்பு, காப்பர் மற்றும் பல தாதுப்பொருட்கள் நிறைந்துள்ளன. இதைப் பற்றிய மேலும் பல தகவல்கள் இதோ…

    கோகோ பட்டரில் உள்ள கொழுப்பு அமிலங்கள், சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாத்து அதை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகின்றன. சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளித்து அதன் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கின்றன. இதில் இருக்கும் 'பைட்டோ கெமிக்கல்கள்' எனப்படும் இயற்கை தாவர மூலக்கூறுகள், சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன.

    எக்ஸிமா மற்றும் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கோகோ பட்டரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் கிரீம்களை உபயோகப்படுத்தினால் எளிதாக குணம் அடையலாம். சருமத்தின் மீது கோகோ பட்டரை நேரடியாகப் பயன்படுத்தும்போது, சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.

    கோகோ பட்டரில் ஒலிக், பால்மிடிக், லினோலிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் உள்ளன. இவை சேதமடைந்த செல்களை சருமத்தில் இருந்து நீக்கி, புதிய சரும அடுக்குகளை உருவாக்குகின்றன.

    சருமத்தில் உள்ள வடுக்கள், தழும்புகள் போன்றவற்றை மென்மையாக்கி மறைக்கும் தன்மை கோகோ பட்டரில் உள்ள மூலக்கூறுகளுக்கு உண்டு. கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்கு பின்பும், பெண்கள் கோகோ பட்டரை உபயோகப்படுத்தினால் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுக்கலாம்.

    கோகோ பட்டர் ஸ்கிரப்

    தேவையான பொருட்கள்:

    கோகோ பட்டர் - 1 டேபிள் ஸ்பூன்

    தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்

    லவங்கப்பட்டை பொடி - 1 டீஸ்பூன்

    செய்முறை: கோகோ பட்டர் மற்றும் தேங்காய் எண்ணெய்யை மிதமான சூட்டில் உருக்கவும். பின்பு அதில் சர்க்கரை மற்றும் லவங்கப்பட்டை பொடியை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை காற்று புகாத கண்ணாடி ஜாடியில் சேமித்து பயன்படுத்தவும்.

    பயன்படுத்தும் முறை: வெதுவெதுப்பான தண்ணீரில் சருமத்தை கழுவ வும். பின்னர் இந்த ஸ்கிரப்பை சருமத்தின் மீது வட்ட இயக்கத்தில் பூசவும். ஸ்கிரப் செய்தபடியே மென்மையாக மசாஜ் செய்யவும். பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் சருமத்தை சுத்தம் செய்து மென்மையான துண்டால் துடைக்கவும். கோகோ பட்டருடன், ஷியா பட்டர், தேன் மெழுகு, வைட்டமின் ஈ எண்ணெய் ஆகியவற்றை கலந்து மாய்ஸ்சுரைசராகவும் உபயோகிக்கலாம்.

    அன்றாடம் பயன்படுத்தும் எளிமையான பொருட்களை கொண்டு முகப்பொலிவை அதிகரிக்கும் வழிமுறைகளை இங்கு காண்போம்.
    சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் சுற்றுச்சூழல்மாசுபாடு, எதிர்மறையான வாழ்வியல் மாற்றங்கள், முறையற்ற உணவுப்பழக்கம், ஹார்மோன்களின் சீரற்ற சுரப்பு போன்றவை சருமத்தில் பாதிப்பை உண்டாக்குகின்றன. இதன் மூலம் முகத்தில் கரும்புள்ளி, முகப்பரு, தோல் சுருக்கம், சரும நிறம் மாற்றம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவற்றுக்கு இயற்கையான முறையில் தீர்வு காண முடியும். அன்றாடம் பயன்படுத்தும் எளிமையான பொருட்களை கொண்டு முகப்பொலிவை அதிகரிக்கும் வழிமுறைகளை இங்கு காண்போம்

    காற்றாழை, புற ஊதாக்கதிர்களை பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாப்பதோடு சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுக்கும் திறன் கொண்டது. ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் சம அளவு தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பொலிவடையும்.

    எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சருமத்தை இளமையாக வைத்திருப்பதற்கு உதவும். இதில் இருக்கும் சிட்ரிக் அமிலம் முகத்தில் படர்ந்திருக்கும் கருமையை நீக்கும் திறன் கொண்டது. ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், சம அளவு தயிர் கலநது முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பளிச்சிடும். இந்த கலவையை வெயில் பட்டு கருத்த இடங்களில் பூசலாம்.

    2 டீஸ்பூன் முட்டைகோஸ் சாறுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகததில் தடவி சிறிது நேரம் கழித்து நீரால் கழுவி விடலாம். இதன் மூலம் முகத்தில் சுருக்கம் ஏற்படுவதை தடுக்கலாம். மென்மையான பளபளக்கான சருமத்தை பெறலாம்.

    கால் தேக்கரண்டி கசகசா, 3 கிராம்பு, அரை அரை ஜாதிக்காய் இந்த மூன்றையும் சிறிதளவு பால் ஊற்றி அரைக்க வேண்டும். இந்த விழுதை முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் முகப்பருவால் ஏற்பட்ட வடுக்களின் மீது பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 20 நாட்கள் செய்து வந்தால் முகம் பளபளக்கும்.

    குப்பைமேனி இலை சாறு 2 தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி, எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி, ரோஜா பன்னீர் அரை தேக்கரண்டி, கற்றாழை சாறு 1 தேக்கரண்டி தேன் கால் தேக்கரண்டி கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் ஊறவைத்த பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளி நீங்கும். முகப்பருக்கள் உண்டாகாது. குப்பைமேனி சருமத்தில் உள்ள சுருக்கத்தை நீக்கி முகத்தை இளமையாக்கும். முகப்பருவால் ஏற்பட்ட தழும்புபளை நீக்கும். குப்பை மேனியை பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்திப்பொடி செய்தோ பயன்படுத்தலாம். நாட்டு மருந்து கடைகளிலும் குப்பைமேனி பொடி கிடைக்கும்.
    ×